நீலங்கொள் மேகத்தின் - 1296வது திருப்புகழ் பாடலின் இறையருளால் உணர்ந்த விளக்கம்!
சிவாய நம ஓம் சாய் ராம், சீரடி சாய் உருவத்தில் குருவாக வந்து ஆட்கொண்ட இறைவனின் திருவடியை ஆத்மார்த்தமாக வணங்கி இந்தப் பதிவு பதிவிடப்படுகிறது. இறையருளால் தன் உள்ளத்தில் இறைவனை உணர்ந்த அருணகிரிநாதப் பெருமான் திருவடிகளையும் ஆத்மார்த்தமாக வணங்கி இந்தப் பாடலின் விளக்கம் இறையருளால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கார்த்திகை தீபம் என்றால் சிவசக்தி ஸ்வரூபமான முருகன், அர்த்தநாரீஸ்வரர் அதாவது தன்னில் சக்தியை இணைத்து உருவம் மறைந்து தீபமாக காட்சி தரும் பரம்பொருளான இறைவன் மனதில் தீபமாக தோன்ற வேண்டும். மனம் சமநிலையில் இருந்து செயல்படும்பொழுது தீபச்சுடராய் மறைந்திருக்கும் இறைவன் உள்ளத்தில் வெளிப்படுவான். இதனை உணர மட்டுமே முடியும்!
வரும் கார்த்திகை திருநாளில் உள்ளமெனும் கோவிலில் நான் என்ற கர்வத்தை நீக்கி நம் அறியாமை இருளை நீக்கும் விதமாக இறைவனை உணர ஆத்மார்த்தமாய் பிரார்த்தனை செய்வோம். சிவாய நம ஓம் சாய் ராம்,
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண்டதனாலே
மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.
சொல்லொருவர்த்தம்
-
நீலம் – நீல நிறம்
-
மேகம் – கருமை
-
நீலங்கொள் மேகத்தின் மயில் – கரு நீல நிறம் கொண்ட மயில் மீது
-
நீ வந்து – முருகக் கடவுள்
-
வாழ்வை கண்டதனாலே – உய்யும் வழி புரிந்த அதனாலே
-
மால்கொண்ட – காமம் ஆசை போன்றவற்றினால் ஆட்கொண்ட
-
பேதைக்கு – அறிவில்லாதவனுக்கு
-
மணம் – இணைதல்
-
நாறு – ஏற்றுக்கொள்ளல், மேம்படுதல், பொறுப்பேற்றல்
-
மார்தங்கு – இதயம்
-
தாரை – வழி, உபாயம்
-
வேல்கொண்டு – தன் கையில் உள்ள வேல் என்னும் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு
-
வேலை – கடல் (பிறவிக்கடல்)
-
பண் – மரக்கலம்
-
எறிதல் – ஏற்பாடு
-
நா – தீ
-
மார் – இதயம்
-
தட்டு – மறைந்து (தோன்றுதல், வெளிப்படுதல்)
விளக்கம்
கரு நீல நிறம் கொண்ட மயில் மீது வந்த முருக கடவுளை கண்டதினால் காமத்தின் பிடியில் சிக்கி அறிவினை இழந்து தவித்த எனக்கு உன்னுடன் இணையக்கூடிய பொறுப்பை ஏற்று உன் இதயத்தில் தங்கும் ஒரு உபாயத்தினை தந்து அருள்வாயே முருகா!
உன்னிடம் இருக்கும் சக்தி வாய்ந்த வேல் என்னும் ஆயுதத்தைக் கொண்டு பிறவி கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்றுபவனே, வீரமுடன் போரிடும் சூரர் குலத்திற்கு எமன் போன்றவனே, அந்த நான்கு மறைகளின் பொருளாக இருப்பவனே, இதயத்தில் தீச்சுடராக மறைந்து இருந்து வெளிப்படுபவனே!
சிவாய நம ஓம் சாய் ராம்!
Comments
Post a Comment