சிவாய நம, முழு முதல் கடவுளான விக்னங்களை தீர்க்கும் விநாயகரின் திருவடி வணங்கி, இம்மையில் குருவாக வந்து ஒரு நொடியும் பிரியாது இன்றைய உலகத்திற்கு தேவையான விஷயங்களுக்கு மட்டுமல்லாமல் மறுமை உலகத்திற்கு செல்லும் பொழுதும் வழிகாட்டக்கூடிய அந்தப் பிரகாசமான ஞான ஒளி ஆன ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான சாய்நாதரின் திருவடிகளை வணங்கி, அவர் அருளால் வெறும் எழுதுகோலாக இருக்கும் இந்த நாயேன் குருவின் அன்பை உணர்ந்து, உள்ளம் உருகி அவருடைய தாமரை மலர்ப் பாதங்களை அன்புடன், நன்றியுடன், பணிந்து வணங்கி, படிப்பவர் உள்ளத்தை உருக்கும் வண்ணம் திருவாசகத்தை பாடிய மாணிக்கவாசகப் பெருமான் திருவடிகளையும் வணங்கிப் பணிகிறேன்.
மாணிக்கவாசகப் பெருமான் எழுதிய வார்த்தைகளின் உட்பொருளை அவரே உணர்த்தி அதன்மூலம் அவர் உணர்ந்த உண்மைப் பொருளான இறைவனை உணர்த்த வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கத்துடன் கூடிய பணிவான கோரிக்கை அவருடைய திருவடியில் குருவின் அருளால் வணக்கத்துடன் வைக்கப்படுகிறது.
சிவபுராணத்தின் ஆழமான வார்த்தைகளுக்கு உட்பொருள் உணர்ந்து, உண்மைப் பொருள் அறிய முழுமுதற் கடவுளான விநாயகரும், அன்பின் உருவமான குருவும், தான் உணர்ந்த இறைவனை உணர ஏங்கும் அடியவர் உணர மாணிக்கவாசகப் பெருமானும் வழிகாட்ட, இந்த எழுதுகோல் இந்த விளக்கங்களை எழுதுகிறது. அவரவர் உணர்வு நிலை மற்றும் பக்குவ நிலைக்கு ஏற்ப படிப்பவருக்கு உட்பொருளும் உண்மை பொருளும் உள்ளத்தில் உணர முடியும்! அவன் அருளாலே அவன் தாள் வணங்கி உட்பொருளையும் உண்மை பொருளையும் உணர்வோம்! சிவாய நம ஓம் சாய் ராம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
🌼 மேலோட்டமான பொருள்:
ஐந்து கைகளும், யானை முகமும், இளம்பிறை சந்திரன் போல வளைந்த தந்தமும் உடையவராக இருக்கும்
சிவபெருமானின் மகன், அறிவின் ஒளியாக இருக்கும் விநாயகரை
என் உள்ளத்தில் வைத்து, அவர் திருவடிகளைப் போற்றுகின்றேன்.
🔥 ஆழ்ந்த உட்பொருள்:
தமிழை மேலோட்டமாகப் படிக்கும் போது ஒரு பொருளைப் புரிந்துகொள்வோம்.
ஆனால் தமிழ் சொற்களின் ஆழமான அர்த்தங்களை ஆராயும் ஆர்வம் எழும்பினால்,
இறைவனின் திருவருளால் உட்பொருளும், உண்மைப் பொருளும் நம்மால் உணர முடியும்.
📚 அருஞ்சொற்பொருள் விளக்கம்:
| சொல் | பொருள் |
|---|---|
| ஐந்து | நம் ஐம்புலன்கள் — கண், மூக்கு, காது, நாக்கு, தொடு உணர்வு |
| கரம் | அழிக்கவும், கட்டுப்படுத்தவும் செய்யும் திறன் |
| யானை | மதயானையைப் போல் பிரளய காலத்தில் அழித்தல் |
| இந்தின் | கரிய நிறம் கொண்ட (இருளின் வடிவம்) |
| இளம்பிறை | அமாவாசைக்கு பிறகு தோன்றும் மூன்றாம் பிறைச் சந்திரன் |
| எயிற்றனை | பால் அல்லது தந்தம் — இங்கு “பால்” என்ற பொருள் பொருந்தும் |
| நந்தி மகன் | சிவகணங்களின் (படைகளின்) தலைவன் |
| ஞானக் கொழுந்து | அறிவின் ஒளி, உண்மை ஞானம் |
| புந்தி | உள்ளத்தில் புரிதல், அறிவின் உள்ளார்ந்த பகுதி |
| அடி | திருவடி, தெய்வீக பாதம் |
🎨 பாடல் விளக்கம்:
விநாயகர் நம்முடைய ஐம்புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு, தொடு உணர்வு ஆகியவற்றை
அடக்கி அழித்து, இறைவனை உணர நமக்கு அமைதியும் அறிவும் அளிக்கிறார்.
அமாவாசைக்குப் பிறகு, கரிய இருள் நிறைந்த வானத்தில்
பால் போன்ற இளம்பிறைச் சந்திரன் தோன்றுவது போல,
வெறுமையில் (சூன்யத்தில்) இருந்து உயிர்களை உருவாக்கி,
போர்த் தலைவனைப் போல் அவற்றைப் பாதுகாக்கிறார்.
விநாயகர் உயிர்களின் தலைவராகவும், அறிவின் ஒளியாகவும் விளங்குகிறார்.
நாம் அவருடைய தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் ஆகிய சக்திகளையும்,
ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வழிநடத்தும் பெருமையையும் உள்ளத்தில் உணர்ந்து,
அவரது திருவடிகளை பணிந்து போற்ற வேண்டும் என்பதுதான் இப்பாடலின் பொருள்!
Comments
Post a Comment